கடந்த 2022 ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில், அமைச்சர் மரிய வில்சன், தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலினை தாக்கியதாக கூறி, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை நேரடியாக முடிவு செய்யாமல், இருதரப்பும் சமரசத் தீர்வு மையத்தை அணுகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தில் ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, இன்று மூன்றாவது முறையாக சமரசத் தீர்வு மைய நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்னிலையில் அமைச்சர் மரிய வில்சனும், அவரது சகோதரர் மரிய குலோத்தும் நேரில் ஆஜராகினர். இருதரப்பினரிடமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், கருத்து வேறுபாடுகள் நீடித்ததால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனால், வழக்கில் சமரச வாய்ப்பை மேலும் ஆராயும் நோக்கில், இருவரும் மீண்டும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சமரசத் தீர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, பேச்சுவார்த்தையை நீதிபதி ஒத்திவைத்தார்.
