2026-ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது. உலக சதுரங்க கூட்டமைப்பு (FIDE) அதிகாரப்பூர்வமாக இந்தத் தேதிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவின் நடப்பு உலக சாம்பியனும், சென்னைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டருமான டி. குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிண்டரோவை எதிர்கொள்கிறார்.
இந்த உலக சாம்பியன்ஷிப் பல்வேறு வகைகளில் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதன்முறையாக 20 வயதிற்குட்பட்ட இரண்டு இளம் வீரர்கள் இறுதிப் பட்டத்திற்காக மோதவுள்ளனர். 2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்று, உலகின் இளம் செஸ் சாம்பியனாக குகேஷ் சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அவர் களமிறங்குகிறார்.
இந்தத் தொடர் மொத்தம் 14 கிளாசிக்கல் ஆட்டங்களைக் கொண்டதாக இருக்கும். முதலில் 7½ புள்ளிகள் பெறும் வீரர் உலக சாம்பியனாக அறிவிக்கப்படுவார். ஒரு வீரர் 7½ புள்ளிகளை எட்டியவுடன் மீதமுள்ள ஆட்டங்கள் நடத்தப்படாது. 14 ஆட்டங்களின் முடிவில் 7-7 என்ற சமநிலை ஏற்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டை–பிரேக்கர் ஆட்டங்கள் நடத்தப்படும்.
போட்டி நடைபெறும் இடம் குறித்து FIDE-யின் இடைக்காலத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், இந்தியா, அமெரிக்கா, சைப்ரஸ் உள்ளிட்ட பல நாடுகள் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியதாகவும், அனைத்து முன்மொழிவுகளையும் பரிசீலித்த பிறகு நடுநிலையான இடமாக ஜெனீவா தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். உலகம் முழுவதிலிருந்தும் ரசிகர்கள் இணைய வழியாக போட்டியை காணும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், ஜெனீவாவில் நேரடியாக ஆயிரக்கணக்கான செஸ் ரசிகர்கள் இந்த உலகத் தரப் போட்டியை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
உலக செஸ் அரங்கில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், குகேஷின் பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சியை இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கி வருகின்றனர்.

