திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தவெக ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
த இந்து ஆங்கில நாளேட்டில் தவெக ஆட்சி தொடர்பான தலையங்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்த ‘குற்றத்திற்காக‘ பத்து பேரை அவதூறு வழக்கில் தவெக அரசு கைது செய்திருப்பதாகவும், ஜனநாயகத்திற்கு இது நல்லதில்லை என்றும் கண்டித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் தனது பதிவில், ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கை தி இந்து நாளிதழ் கடுமையாகச் சாடியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் சாடியுள்ளார்.
