திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டதோடு அங்கு சிகிச்சைக்கு வரும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியருடன் இணைந்து  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருப்பூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் தேவைகள் குறித்தும், புற்றுநோய் சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

புற்றுநோய் சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், கட்டுமானத் தரத்தில் எந்தவித சமரசமும் இன்றி, அரசு ஒதுக்கிய நிதியைக் கொண்டு மிகச் சிறந்த முறையில் இதனை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும்  புற்றுநோய் சிகிச்சை மையத்தில்  அதிநவீன ‘3D சிமுலேட்டர்’ கருவி தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் TNMSC (Tamil Nadu Medical Services Corporation) மூலமாக இக்கருவியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, கூடிய விரைவில் திருப்பூர் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு இந்த அதிநவீன வசதி கிடைக்கும்.

திருப்பூர் பகுதியில் விபத்துகளால் ஏற்படும் தலைக் காயங்களுக்கு (Head Injury) அவசர சிகிச்சை அளிக்க தற்போதைய சூழலில் கோயம்புத்தூருக்குப் பரிந்துரைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்க்க, திருப்பூரிலேயே ஒரு பிரத்யேக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Neuro Surgeon) பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்தும் உரிய அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வு முறைகேடுகள், ரத்து மற்றும் மறுதேர்வு போன்ற காரணங்களால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை அரசு உணர்ந்துள்ளது. இதற்காகத் தமிழக அரசு ‘மனம்’ (MANAM) திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருவதாகக் கூறியவர்,

மாணவர்கள் எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஏதேனும் மன அழுத்தம் இருந்தால் 104 என்ற பிரத்யேக உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இந்த வசதியைப் பெற்றோர்களும் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

மாசுபட்ட மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் சிகெல்லா (Shigella) போன்ற வயிற்றுப்போக்கு மற்றும் இதர நோய்களைத் தடுக்க, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தீவிர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் தரம் மற்றும் தூய்மை முறையாகப் பேணப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

அமைச்சர் திடீர் ஆய்விலும் ரீல்ஸ்..

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், மாவட்ட ஆட்சியர் மனிஷ் உடன் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர். ஒவ்வொரு பகுதியாக அமைச்சர் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அவரை பின்தொடர்ந்து வந்த கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து அவர் செய்யும் ஆய்வுகளை ரீல்ஸ் பதிவிடுவதற்காக செல்போன் மூலம் வீடியோ எடுத்து வந்தனர். கட்சி நிகழ்ச்சிகளில் வீடியோ எடுத்ததை தாண்டி தற்பொழுது அரசு நிகழ்ச்சிகளிலும் மருத்துவமனை ஆய்வுகளிலும் கூட கட்சி நிர்வாகிகள் உள்ளே புகுந்து ரீல்ஸ் எடுக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version