திருக்கோயில்களில் பக்தர்களுக்கு நியாயமான விலையில் தரமான பூஜைப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பூஜைப் பொருட்கள் விற்பனையில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்யவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருக்கோயில்கள் மற்றும் கோயில் வளாகங்களில் செயல்படும் அனைத்து பூஜைப் பொருள் விற்பனைக் கடைகளும் தங்களது பொருட்களுக்கான நியாய விலைப்பட்டியலை கடையின் முன்பாக கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக பணம் வசூலிக்கக் கூடாது என்றும் அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும், தரமான பூச்சரம், பூமாலைகள், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, எண்ணெய், நெய் உள்ளிட்ட அனைத்து பூஜைப் பொருட்களும் இறைவனுக்கு சமர்ப்பிக்கத் தகுந்த தரத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன அல்லது தரம் குறைந்த பொருட்களை பக்தர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் கேட்காத பொருட்களை வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்றும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்கக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மஞ்சள் துணிப்பைகள், மூங்கில் கூடைகள் மற்றும் வலுவான காகிதப் பைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது.
