மின்கட்டண உயர்வு திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டில் விரைவில் மின்கட்டணத்தை உயர்த்த தவெக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மின் கட்டண உயர்வு இருக்கும்” என்ற அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த மின்கட்டண உயர்வால் சாமானிய பொதுமக்கள் மட்டுமன்றி, வியாபாரிகளும் வணிகர்களும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
முந்தைய அதிமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட ஒன்றிய பாஜக அரசின் ‘உதய்’ மின் திட்டத்தின்படி ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின்கட்டண உயர்வை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாக உள்ளது. கடந்த திமுக அரசு, இந்த விதியால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, வீட்டு மின் பயன்பாட்டுக்கான கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, தொழில் மற்றும் வணிக ரீதியான மின்கட்டணத்தை மட்டுமே உயர்த்தியது. தற்போதுள்ள தவெக அரசு, கடந்த அரசு பின்பற்றிய அந்த வழிமுறையை பின்பற்றுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அதேசமயம் தற்போது மாநிலம் முழுவதும் நிலவி வரும் மின் தட்டுப்பாடு, மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் ஏற்கனவே பெரும் நஷ்டத்தையும் சிரமங்களையும் சந்தித்து வருகின்றன. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக முடங்கியுள்ளதோடு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், புதிய மின்கட்டண உயர்வு என்பது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல, வணிகர்களின் தலையில் விழும் இடியாக அமைந்து விடக்கூடாது.
தொழில் மற்றும் வணிக ரீதியான மின்கட்டணம் உயர்த்தப்பட்டால், உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரிக்கும். இந்த உற்பத்திச் செலவு அதிகரிப்பு என்பது இறுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வாகவே உருவெடுக்கும். இது நேரடியாக ஏழை, எளிய நடுத்தர மக்களைப் பாதிப்பதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் கடுமையாக முடக்கும் பேராபத்தாக முடியும்.
ஆகவே, தவெக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு தொழில்துறையினரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
