தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்க்கட்சியான திமுக-வின் விமர்சனங்களுக்குக் புள்ளிவிவரங்களுடன் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மக்களின் நலன் விரும்பும் அரசாகத் தமிழக வெற்றிக் கழக அரசு இன்று அவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு ஆதரவளித்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
புள்ளிவிவரப் பதிலடி
தவெக-வுக்குப் பெரும்பான்மை இல்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் விமர்சனத்திற்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய்,” தனித்துப் போட்டியிட்ட தவெக 34.92% வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், கூட்டணிகளுடன் போட்டியிட்ட திமுக பெற்ற தனிப்பட்ட வாக்கு சதவிகிதம் வெறும் 24.19% மட்டுமே. திமுக-வை விட தவெக 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.
76 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி (திமுக), 35 சதவீத மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற எங்களைப் பார்த்து ஏளனமாகப் பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்று சாடி உள்ளார்.
அரசியல் நாகரிகமும் கொள்கை உறுதியும்
மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில் தவெக உறுதியாக இருப்பதால் தான் மற்ற இயக்கங்கள் தங்களை ஆதரித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், 1999-இல் பாஜக-வுடன் கூட்டணி அமைத்து மந்திரி பதவிகளைப் பெற்ற திமுக-வின் கடந்த கால அரசியலை நினைவுபடுத்தி உள்ளார். “நாங்கள் ‘சேஞ்ச்’ மற்றும் ‘சேலஞ்ச்’ இரண்டையும் நம்பி அரசியல் செய்பவர்கள், எதையும் ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்துகொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை” என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
புஷ்பா அரசு அல்ல… மக்கள் அரசு
தவெக அரசை “புஷ்பா அரசு” என்றும் “ரீல்ஸ் அரசு” என்றும் கிண்டல் செய்த உதயநிதிக்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், 15 அமைச்சர்களின் தோல்வியையும், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் தவெக பெற்ற வெற்றியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று திமுக.ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் திமுக., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான்.
மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் திமுக., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி
