பழனி கோயில் தொடர்பான 100 கோடி நிலத்தை மோசடியாகப் பதிவு செய்துள்ளதாக வன்மத்தோடு அவதூறு பரப்புவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை, அமைச்சர் ரமேஷின் உறவினருக்கு குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்து கூறியதாவது;-
குறிப்பிட்ட நிலத்தை பத்திரப்பதிவு செய்யக் கூடாது எனக் கூறி மாவட்ட பதிவுத் துறைக்கு தகவல் தெரிவிகப்பட்ட நிலையில், புதிதாக பொறுப்பு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அந்தப் பதிவை ரத்து செய்ததோடு, இது தொடர்பான வழக்கிலும் நிலத்தை மீட்டெடுக்க உறுதி தரப்பட்டுள்ளது.
சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேவையின்றி அமைச்சரின் உறவினருக்கு பத்திரப்பதிவு செய்திருப்பதாக வன்மத்துடன் அவதூறு பரப்பி வருகின்றனர்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்படுபவர்கள் மீது காவல் துறையில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும்.
கரூரில் கோயில் நிலத்தை பட்டா போட்டு கொடுத்ததாக நயினார் நாகேந்திரன் கலர் கலராக ரீல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
அது கோயில் நிலமல்ல; இனாம் நிலம். அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக அதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கோயில் நிலங்களுக்கும் இனாம் நிலங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசி வருகின்றனர்.
கோயில் நிலங்களைப் பொறுத்தவரை ஒரு இஞ்ச் கூட யாருக்கும் கொடுக்க மாட்டோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
