58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் (International Chemistry Olympiad) போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு வரலாற்றுச் சாதனையைப் படைத்த மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேபதத்தா பிரியதர்ஷி, ஹர்ஷித் சிங்கால், கபீர் சில்லார் மற்றும் சந்தீப் குச்சி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவின் சிறந்த செயல்திறனை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்திய இளைஞர்களின் திறமை உலக அரங்கில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நமது மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் அறிவியல் மீதான ஆர்வம் ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்பட வைத்துள்ளது. இந்த வெற்றி, வேதியியல் துறையில் மேலும் பல இளம் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று சிறந்து விளங்க ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி பதிவு செய்த இந்த சாதனை, இப்போட்டியின் வரலாற்றில் இந்தியாவின் சிறந்த செயல்பாடாகக் கருதப்படுகிறது.
