கோவை சைபர் கிரைம் போலீசார், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்று நிர்வாகிகளை ஆன்லைன் பண மோசடி வழக்கில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்கள் திருப்பூர் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி அமைப்பாளர் சுஜித் குமார், கட்சி நிர்வாகி விடியல் தில்லைமுத்து மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ஆவர்.
ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான இணையவழி பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இவர்களை தாராபுரம் பேருந்து நிலையம் அருகே கைது செய்தனர். பின்னர் தாராபுரம் காவல் நிலையத்தில் ஆரம்ப விசாரணை நடத்திய பிறகு, அவர்களை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் வெளிவந்த தகவல்படி, 2026 சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.1 கோடி வரை பல்வேறு தவணைகளாக பெறப்பட்டு, அந்தத் தொகை 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் அந்தப் பணம் மீண்டும் மற்றொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு கணக்கிலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வரவு வைக்கப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பணம் பெற்றவர்களிடம், “ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.20 ஆயிரம் கமிஷனாக வைத்துக்கொண்டு, மீதமுள்ள ரூ.80 ஆயிரத்தை குறிப்பிட்ட கணக்கிற்கு அனுப்பினால் போதும்” என்று கூறி, தமிழ்நாடு முழுவதும் பலரின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பணத்தை கைமாற்றம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் ஹவாலா பணம் பெற்று, அப்பாவி பொதுமக்களின் கணக்குகளில் வரவு வைத்து பரிவர்த்தனை செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஜித் குமார் ஏற்கனவே வேலூரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தாலும், அதன்பிறகும் இணையவழி நிதி மோசடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இவருக்கு நெருங்கிய தொடர்புடைய தாராபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த விடியல் தில்லைமுத்து மற்றும் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரும் தற்போது விசாரணையில் உள்ளனர்.
கோவை சைபர் கிரைம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பணம் எங்கிருந்து வந்தது, யாருடைய கணக்குகள் பயன்படுத்தப்பட்டன, இந்தப் பணம் எதற்காகப் பரிமாற்றம் செய்யப்பட்டது, இறுதியில் எந்தக் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டது, சட்டமன்றத் தேர்தலின்போது இந்த வலையமைப்பில் தொடர்புடையவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இந்தப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெட்வொர்க் தமிழ்நாட்டைத் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், புதுடெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டிருக்கலாம் என்றும், 200 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைமாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுடனும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் அன்னியச் செலாவணி விதிமுறை மீறல் அம்சங்களிலும் விசாரணை விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த சுஜித் குமார், பின்னர் தாராபுரம் புறவழிச்சாலையிலுள்ள ரங்கபாளையம் பகுதியில் வசித்து வந்ததாகவும், குறுகிய காலத்திலேயே சொகுசு கார், மாடி வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தியிருப்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இவர் முன்பு “போலீஸ் நண்பர்கள்” அமைப்பில் பொறுப்பாளராக இருந்ததாகவும், அக்காலகட்டத்தில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்து, பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளில் செயல்பட்டு, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி அமைப்பாளராக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில் திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில், தாராபுரத்தில் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் பல அரசியல் புள்ளிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
