பொருளாதார நிலை தெரிந்திருந்தும் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் நிதிநிலைமை மோசம் என மக்களை தாஜா செய்ய முடியாது  என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் கிராமத்தில் நடைபெற்றது.

அதிமுக முன்னாள் துணை சபாநாயகரும் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமாக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் அதிமுக தொண்டர்கள் சோர்வடையாமல் கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகிறது. ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.

தமிழகத்தின் பொருளாதார நிலை தெரிந்திருந்தும். 10 லட்சம் கோடி கடன் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சூழலில் வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு 4500 உதவித்தொகை, 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக  வழங்கும் திட்டம், விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி போன்ற பல வாக்குறுதிகள் அளித்திருந்தார்.

மக்கள் எதிர்பார்க்கின்றார்கள், எதையும் மறக்கவில்லை, பொருளாதார நிலை மோசமாக இருக்கிறது என தாஜா செய்ய முடியாது.

திமுக கூட்டணியில்  நின்று பெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை, கட்சிகளைச் சேர்த்துத் தான் விஜய் ஆட்சி அமைத்திருக்கிறார்.

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற விமர்சனம் எங்கள்மீது களங்கம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். ஒரு போதும் அண்ணா திமுகவும் திமுகவும் சேராது, சேரவும் முடியாது. வடதுருவம் தென் துருவம் ஒன்றாகுமா?

வேண்டும என்றே கட்டவிழ்த்து விடப்பட்ட கட்டுக் கதை இது.  அதிமுகவின் பாதை வேறு திமுகவின் பாதை வேறு என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version