ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வரலாற்றுச் சாதனை படைத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டோக்கியோவில் நடைபெற்ற BWF Super 750 ஜப்பான் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், உலகின் 3-வது நிலை வீராங்கனையும், ஜப்பான் நட்சத்திரமுமான அகானே யமகுச்சியை 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், ஜப்பான் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை சிந்து படைத்துள்ளார். மேலும், இது அவரது முதல் Super 750 பட்டமாகவும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான பட்ட வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றியாகவும் அமைந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வெற்றிக்குப் பிறகு அவர் பெற்ற மிகப்பெரிய பட்டமும் இதுவாகும்.

சிந்துவின் வெற்றியை பாராட்டி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பதிவில், “பி.வி.சிந்துவின் அபாரமான ஆட்டத்திற்கு வாழ்த்துகள். ஜப்பான் ஓபன் 2026 மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றது மிகச் சிறப்பான சாதனை. அபார திறமையும், விடாமுயற்சியும் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். ஜப்பான் ஓபனை வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவரது சாதனையால் நாடே பெருமை கொள்கிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், “2026 ஜப்பான் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியராக திகழ்ந்துள்ள பி.வி.சிந்துவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறதுஎன்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மூன்று முறை உலக சாம்பியனான அகானே யமகுச்சிக்கு எதிராக, அவரது சொந்த மண்ணில் ரசிகர்கள் மத்தியில் விளையாடிய சிந்து, சக்திவாய்ந்த ஸ்மாஷ்கள், துல்லியமான நெட் ஆட்டம் மற்றும் சிறப்பான தந்திரோபாயங்களின் மூலம் போட்டியை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

குறிப்பாக, 44 ஷாட்கள் நீண்ட பரபரப்பான ராலியில் வெற்றி பெற்றது சிந்துவின் உடற்திறன் மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தியது. இறுதிக்கட்டத்தில் யமகுச்சி இடைவெளியை குறைத்தபோதிலும், சிந்து அமைதியை இழக்காமல் ஆடி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக யமகுச்சிக்கு எதிராக முழுமையான போட்டியில் வெற்றி பெற முடியாதிருந்த சிந்து, இந்த வெற்றியின் மூலம் அந்த சாதனையையும் முறியடித்து, வரும் சர்வதேச தொடர்களுக்கு முன்பாக தனது வலிமையான மீள்வரவை பதிவு செய்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version