கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கிலோ அரிசிக்கு ₹10 முதல் ₹15 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி உணவுப் பொருளான அரிசியின் விலை ஏற்றம் குடும்ப பட்ஜெட்டை பாதிக்கத் தொடங்கியுள்ளது.

கர்நாடகாவில் நெல் உற்பத்தி கடுமையாகக் குறைந்ததே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என அரிசி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டாலும், பெரும்பாலானோர் உயர் தரமான கர்நாடக பொன்னி அரிசியை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த ஆண்டு கர்நாடகாவில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காததால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிலோ ₹55-க்கு விற்ற கர்நாடக பொன்னி அரிசி, முதலில் ₹65-ஆகவும், தற்போது ₹80-ஆகவும் உயர்ந்துள்ளது. 25 கிலோ மூட்டை ஒன்றின் விலை ₹350 முதல் ₹500 வரை அதிகரித்துள்ளது. இட்லி அரிசியின் விலையும் ₹35-லிருந்து ₹50-க்கு உயர்ந்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழக அரிசியும் பாதிப்பு: தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடக வியாபாரிகள் தமிழகத்தில் உற்பத்தியாகும் நாட்டுப் பொன்னி அரிசியை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தின் நாட்டுப் பொன்னி விலை ₹60-லிருந்து ₹85-ஆக உயர்ந்துள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கூற்றுப்படி, நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி நெல் உற்பத்தியை பெரிதும் பாதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த கோடைக்காலத்தில் 1.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 88 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குருவை சாகுபடியும் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. அரசு இலக்கிட்ட 1 லட்சம் ஏக்கருக்கு பதிலாக 60,000 ஏக்கரில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை காரணமாக மகசூல் குறையும் அபாயமும் உள்ளது.

இந்த நிலையில், அரிசி களவு மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வறட்சியால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி தொடர்ந்தால் அரிசி விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. விவசாயிகளுக்கு உரிய ஆதரவு வழங்கி உற்பத்தியை அதிகரிக்கவும், சந்தை நிலையை கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version