தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் அரசு அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் கைதாகி உள்ள திமுக செய்தித்தொடர்பு குழு துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மீது சென்னை காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத போலி அமைப்பு ஒன்றை அரசகுமார் நடத்தி வந்துள்ளதாக தெரிகிறது. தமக்கு அரசியல் மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல், DTCP மற்றும் CMDA கட்டட அனுமதிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகப் பல பள்ளிகளிடம் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை நம்பி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசகுமாரிடம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், சொன்னபடி எந்த அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் இழுத்தடித்து ஏமாற்றியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த ஜூன் மாதம் அரசகுமாரைக் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணம் கொடுத்து ஏமாந்த மற்ற பள்ளிகளும் தைரியமாக முன்வந்து புகாரளிக்கலாம் என காவல்துறை அறிவித்திருந்தது. அதன்படி, இதுவரை 59 தனியார் பள்ளிகள் அரசகுமாருக்கு எதிராகச் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்த மோசடித் தொகை ரூ.100 கோடியைத் தாண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கில் பல மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், மோசடியின் வீரியம் அதிகமாக இருப்பதாலும், சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், சிறையில் இருக்கும் திமுக நிர்வாகி அரசகுமார் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவர் அவ்வளவு எளிதில் ஜாமினில் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
