சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் வெளிப்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
கான்பூர் நகரிலிருந்து டெல்லி நோக்கி பயணம் செய்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தேசியத் தலைவரும், சர்சங்கசாலகுமான மோகன் பகவத் நேற்று பயணம் செய்தபோது, அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பிரோசாபாத் மாவட்டம் வழியாக ரயில் சென்று கொண்டிருந்தபோது, அவர் பயணம் செய்த ஈ-1 பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் பெட்டியின் வெளிப்புற கண்ணாடி விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, மோகன் பகவத் உள்பட அவருடன் பயணம் செய்த பாதுகாவலர்கள் மற்றும் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த உடனேயே ரயில் நிர்வாகம் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, துண்ட்லா சந்திப்பில் ரயிலை நிறுத்தியது. ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதி செய்த பிறகு ரயில் டெல்லி நோக்கி புறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஆக்ரா ரயில்வே மண்டலத்தின் ஏ.டி.ஜி.பி. எஸ்.கே. பகத் தலைமையில் உயர் அதிகாரிகள் பிரோசாபாத் பகுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்ளூர் போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவரான மோகன் பகவத் அடிக்கடி நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வது வழக்கம். அவரது பாதுகாப்புக்கு உயர் மட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், இந்த சம்பவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இச்சம்பவம் வேகமாகப் பரவி, பல்வேறு அரசியல் தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் இதை அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக்குதல் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.ரயில்வேத்துறை மற்றும் உத்தரப்பிரதேச போலீஸ் உயர் அதிகாரிகள் இணைந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். முழு சம்பவத்தின் பின்னணியும், தாக்குதலுக்கான காரணமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுகள் வரும் நாட்களில் முக்கியத்துவம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
