சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தைப் போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடாக அபகரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த நிலத்தைத் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாகச் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுச் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை எதிர்த்து மா.சுப்பிரமணியன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தார். தங்களது மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறு என்றும், அவற்றை மறுப்பதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

இதையடுத்து, இருவர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் சாட்சி விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version