தமிழகத்தில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை இன்னும் முழுமையாக உறுதி செய்ய முடியாத நிலை தொடர்கிறது.
இந்த சூழலில், திமுக – அதிமுக இடையே புதிய அரசியல் கூட்டணி உருவாகிறதா என்ற கேள்வி தற்போது தமிழக அரசியலின் மைய விவாதமாக மாறியுள்ளது.
அதிமுக ஆட்சியமைக்க ஆதரவா?
அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு என்பதுபோன்று நேற்று இரவு முதல் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்த நிலையில், அதனை இரு கட்சித் தலைமையும் மறுக்காமல் இருந்தது மேலும் பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி இன்று மாலை புதுச்சேரிக்கு சென்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அங்கு முகாமிட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தவெகவுக்கு ஆதரவு அளிப்பதா? தனியாக செயல்படுவதா? அல்லது புதிய அரசியல் கூட்டணிக்கு நகர்வதா என்ற கேள்விகள் குறித்து அங்கு தீவிர ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் போட்ட உத்தரவு
இதற்கிடையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டமும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. கூட்டத்தில் பேசிய மு க ஸ்டாலின், “சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால் கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கலாம்.
மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடலாம். என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, மே 10ம் தேதி வரை அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவுறுத்தல் சாதாரண ஒன்றல்ல என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். காரணம், தமிழகத்தில் ஆட்சியமைப்பு குறித்த எந்த நேரத்திலும் திடீர் அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற கணிப்பே இதற்குப் பின்னணியாக பார்க்கப்படுகிறது.
தற்போது தவெகவுக்கு ஆட்சியமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகினாலும், அது மட்டும் போதுமானதா என்ற கேள்வி தொடர்கிறது.
காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி?
இதனிடையே, அதிமுகவின் சில முக்கிய தலைவர்கள் தவெகவுக்கு ஆதரவாக உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு இன்னும் முழுமையான சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சரான அவர், விஜய் தலைமையிலான அரசில் துணை முதலமைச்சர் நிலைக்கு செல்வதை அரசியல் ரீதியாக ஏற்க தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில்தான் திமுகவின் அடுத்தகட்ட நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. திமுக நேரடியாக ஆட்சியில் பங்கேற்காமல், வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதன் மூலம், தவெக – அதிமுக – பாஜக இடையிலான அரசியல் சமன்பாட்டை உடைக்க முடியும் என்ற கணக்கும் திமுக தரப்பில் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பரபரக்கும் அரசியல் களம்
இதேவேளை, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி கே எஸ் இளங்கோவன், “தவெக ஆட்சியமைப்பதை திமுக தடுக்கவில்லை. ஆளுநர் பெரும்பான்மையை கேட்பது இயல்பான நடைமுறை” என்று கூறியிருந்தார். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
தமிழக அரசியலில் தற்போது ஒவ்வொரு மணி நேரமும் புதிய திருப்பங்களை உருவாக்கி வருகிறது. ஒருபுறம் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருக்க, மறுபுறம் அதிமுக உட்கட்சி குழப்பத்தில் சிக்கியுள்ளது. இதற்கிடையில், திமுக தனது அரசியல் கணக்குகளை மிக கவனமாக நகர்த்தி வருவதாக தெரிகிறது.
ஸ்டாலின் எம்.எல்.ஏக்களை சென்னையில் தங்க வைத்திருப்பது, எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் எம்.எல்.ஏக்களை சந்திப்பது, தவெகவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் குரல் கொடுப்பது என தமிழக அரசியல் தற்போது முழுமையான பரபரப்பு நிலைக்குள் சென்றுள்ளது. அடுத்த சில நாட்களில் எடுக்கப்படும் முடிவுகள், தமிழ்நாட்டின் அடுத்த ஆட்சியை மட்டுமல்ல, மாநிலத்தின் எதிர்கால அரசியல் கூட்டணி அமைப்புகளையும் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
– பா. முகிலன்
