திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், லைசென்ஸ் வழங்குதல், வாகன பதிவு மற்றும் வாகனங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
அதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் திடீரென உள்ளே நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்திற்குள் பல்வேறு சேவைகளுக்காக வந்திருந்த சுமார் 20 பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் முடிவில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1,65,400 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த திடீர் சோதனை கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
