மிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி அளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, கேரளம், அசாமில் கடந்த ஏப்.9-ம் தேதியும், தமிழகத்தில் ஏப். 23-ம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் 85.10 சதவீதம், மேற்கு வங்கத்தில் 92.47 சதவீதம், புதுச்சேரியில் 89.87 சதவீதம், கேரளத்தில் 78.27 சதவீதம், அசாமில் 85.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின.வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக, அமைதியாக நடைபெற, 165 கூடுதல் வாக்கு எண்ணும் பார்வையாளர்கள், 77 காவல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 5 மாநிலங்களிலும் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர்.மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

இந்த நிலையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.தமிழகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள், போலீஸார், முதியோர், மாற்றுத் திறனாளிகள் என 8.15 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் எண்ணி முடித்த பிறகே, இயந்திரங்களில் பதிவான இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

முன்னிலை நிலவரம் காலை 11 மணி முதல் வெளியாகும். தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்களை இசிஐநெட் (ECINet) செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் மக்கள் தெரிந்துகொள்வதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

மோதலில் ஈடுபட்டால் கைது டிஜிபி எச்சரிக்கை

வாக்கு எண்ணிக்கையின்போது மோதலில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் உட்பட தமிழகம் முழுவதும் கண்காணிப்பு, ரோந்துப் பணியில் 1 லட்சம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விடுமுறையில் இருந்த போலீஸாரும் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் துணை ராணுவப் படையினரும் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடத்தி முடித்துள்ளனர்.

சில பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகும்போது வெற்றி – தோல்வியை மையமாக வைத்து சிலர் மோதலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக மாநில உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தகராறு, மோதல், கலவரத்தில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version