காவிரி நீர் விவகாரத்தில் முதலமைச்சர்  விஜயின் அறிவுறுத்தலின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குரிய நீரை உரிய நேரத்தில் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், காவிரி நீர் பகிர்வில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 26.954 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பாசனமும், குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த உத்தரவின்படி 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலும், பிலிகுண்டுலு எல்லைப் பகுதியில் தற்போது அதிகபட்சமாக 550 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3-ஆம் தேதி நிலவரப்படி, கர்நாடக மாநிலத்தின் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். அணையில் 23 டிஎம்சி, கபினி அணையில் 18.6 டிஎம்சி, ஹாரங்கி அணையில் 7.8 டிஎம்சி, ஹேமாவதி அணையில் 28 டிஎம்சி என மொத்தம் 77.53 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், இந்த அளவிலான நீர் இருப்பு உள்ள நிலையில், தமிழகத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவுக்கு எந்தவித சிரமமும் இருக்க முடியாது என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

எனவே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 26.954 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version