இந்தியாவில் தேர்தல் என்பது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல; அது ஜனநாயகத்தின் உயிரோட்டம். ஒவ்வொரு தேர்தலும் மக்கள் ஆட்சியின் அடிப்படை நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாகும். ஆனால் இந்தியா போன்ற பரந்த சமூக-அரசியல் அமைப்பில், ஜனநாயகம் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுவதில்லை. ஒரே தேர்தல் முறையின் கீழ் கூட அரசியல் சூழல், தேர்தல் கலாச்சாரம், பாதுகாப்பு சூழ்நிலை போன்றவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. தற்போது நடைபெறும் தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் தேர்தல்கள் இந்த வேறுபாட்டை தெளிவாகக் காட்டுகின்றன.
இரண்டு மாநிலங்களும் இந்திய அரசியலில் முக்கியமானவை. இரண்டிலும் கடுமையான அரசியல் போட்டி நிலவுகிறது. ஆனால் தேர்தல் நடைபெறும் முறை மற்றும் அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடு இந்திய ஜனநாயகத்தின் பல்வேறு முகங்களை வெளிப்படுத்துகிறது.
ஒரே நாள் தேர்தல் vs பல கட்ட தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் பொதுவாக ஒரே கட்டமாக நடைபெறும். வாக்குப்பதிவு ஒரே நாளில் முடிவடைகிறது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை நாளில் முடிவு வெளிவரும். தேர்தல் நிர்வாக ரீதியாக இது எளிமையான அமைப்பாகும். தேர்தல் நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாகத் திட்டமிடல் ஒரே நாளில் குவிக்கப்படுவதால், தேர்தல் செயல்முறை விரைவாக முடிவடைகிறது.
ஆனால் மேற்குவங்கத்தில் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுவது வழக்கம். பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசியல் மோதல்கள், மற்றும் நிலப்பரப்பு போன்ற காரணங்களால் தேர்தலை பல கட்டங்களாக நடத்த வேண்டிய சூழல் அங்கு உருவாகிறது. இதனால் தேர்தல் நாட்கள் நீள்கின்றன; வாக்குப்பதிவு ஒரு நீண்ட அரசியல் செயல்முறையாக மாறுகிறது.
இந்த வேறுபாடு வெறும் நிர்வாகத் தீர்மானம் மட்டுமல்ல. அது அந்த மாநிலங்களின் அரசியல் சூழலை பிரதிபலிக்கும் ஒரு உண்மை.
தேர்தல் கலாச்சாரம்
தமிழ்நாட்டில் தேர்தல் என்பது கடுமையான அரசியல் போட்டி இருந்தாலும் பெரும்பாலும் அமைதியான ஜனநாயக நிகழ்வாகவே நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரங்கள் கடுமையாக இருந்தாலும், வாக்குப்பதிவு நாளில் பொதுவாக அமைதியான சூழல் நிலவுகிறது. வாக்காளர்கள் சீராக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பது வழக்கம்.
இதற்கு மாறாக மேற்குவங்கத்தில் தேர்தல் அரசியல் மோதல்களுடன் இணைந்த நிகழ்வாக பல ஆண்டுகளாக பார்க்கப்படுகிறது. தேர்தல் காலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். மத்திய பாதுகாப்பு படைகள் பெருமளவில் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.
இதற்கிடையில் இந்த தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நாளிலேயே மேற்குவங்கத்தின் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவானதாக செய்திகள் வெளியானது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும், சில இடங்களில் கச்சா குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவங்களில் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சில இடங்களில் வாக்காளர் அச்சுறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் வாக்குப்பதிவு தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான இடைக்கிடையான வன்முறை சம்பவங்கள் மேற்குவங்க தேர்தல்களில் பல ஆண்டுகளாகவே விவாதமாக இருந்து வருகின்றன.
வாக்காளர் பங்கேற்பு
இந்த வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டு மாநிலங்களிலும் ஒரு பொதுவான அம்சம் உள்ளது — அதிக வாக்காளர் பங்கேற்பு. தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தல்களில் பொதுவாக 70 சதவீதத்துக்கும் மேல் வாக்கு பதிவு ஏற்பட்டுள்ளது. 2016 தேர்தலில் சுமார் 74 சதவீதம், 2021 தேர்தலில் 70 சதவீதத்தைத் தாண்டிய turnout பதிவாகியுள்ளது.
மேற்குவங்கத்திலும் வாக்காளர் பங்கேற்பு பொதுவாக அதிகமாகவே இருக்கும். பல தேர்தல்களில் அங்கு turnout 80 சதவீதத்தை நெருங்கியிருக்கும். இது அரசியல் போட்டி கடுமையாக இருந்தாலும், மக்கள் தேர்தலில் பங்கேற்கும் ஆர்வம் அதிகமாக இருப்பதை காட்டுகிறது.
அரசியல் மரபுகள்
தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் இரண்டும் தனித்துவமான அரசியல் மரபுகளை கொண்ட மாநிலங்கள். தமிழ்நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக பிராந்திய கட்சிகள் அரசியலை நிர்ணயித்து வருகின்றன. மாநில அரசியல் பெரும்பாலும் சமூக நலத் திட்டங்கள், மொழி மற்றும் பிராந்திய அடையாளங்கள், மற்றும் உள்ளூர் அரசியல் மரபுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
மேற்குவங்கத்தில் அரசியல் வரலாறு வேறுபட்ட பாதையில் வளர்ந்துள்ளது. நீண்ட கால இடதுசாரி ஆட்சி, அதன் பின்னர் பிராந்திய அரசியல் எழுச்சி மற்றும் தேசிய கட்சிகளின் போட்டி ஆகியவை அங்கு அரசியலை வடிவமைத்துள்ளன. இதனால் தேர்தல் அரசியலின் மொழி மற்றும் பிரச்சினைகளும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன.
தேர்தல் நிர்வாகத்தின் சவால்கள்
இந்த இரண்டு மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தேர்தல் நிர்வாகத்தின் சவால்களும் வேறுபடுகின்றன. தமிழ்நாட்டில் ஒரே கட்ட தேர்தல் நடத்தப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரே நாளில் கவனம் செலுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையமும் மாநில நிர்வாகமும் இணைந்து அமைதியான தேர்தலை உறுதி செய்ய முயற்சிக்கின்றன.
மேற்குவங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் நீண்ட காலத்திற்கு திட்டமிடப்படுகின்றன. மத்திய பாதுகாப்பு படைகள் பல வாரங்கள் பணியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஜனநாயகத்தின் பல முகங்கள்
இந்த எல்லா வேறுபாடுகளும் ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகின்றன: இந்திய ஜனநாயகம் ஒரே மாதிரியான அனுபவம் அல்ல. அது பல்வேறு அரசியல் சூழல்களில் இயங்கும் ஒரு பரந்த அமைப்பாகும்.
ஒரு மாநிலத்தில் தேர்தல் அமைதியான ஜனநாயக நிகழ்வாக நடைபெறலாம். மற்றொரு மாநிலத்தில் அது கடுமையான அரசியல் மோதல்களின் பின்னணியில் நடைபெறலாம். ஆனால் இரண்டிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் மக்கள் தான் ஜனநாயகத்தின் அடித்தளம்.
– பா. முகிலன்
