மாற்றுத் திறனாளி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை என்ன ஆனது? என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தல் தோல்விக்குப் பிறகான உத்திகள் குறித்து விவாதிக்க நாளை (வியாழக்கிழமை) கோவையில் பாஜக மத்தியக் குழு மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தாலும், கட்சி மிகுந்த உற்சாகத்துடன் மீண்டெழும் என்று தமிழிசை தெரிவித்தார். இந்திய அளவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், “இந்தத் தேர்தல் யாராலும் முன்கணிக்க முடியாத அளவுக்கு சிக்கலானதாக இருந்தது. எனினும், புதிய அரசின் மீது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது” என்றார்.

திமுக அரசு ஏன் மக்களால் புறக்கணிக்கப்பட்டது என்பதை புதிய அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய தமிழிசை, “கடந்த காலங்களில் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்ததே அதற்கு முக்கிய காரணம்” என்று குறிப்பிட்டார். உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஆணைமேடு செப்புப் பட்டயங்கள்’ விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கத் தவறியதைக் கண்டித்த அவர், “இதன் மூலம் பிரதமர் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். பாரபட்சமான அணுகுமுறையை புதிய அரசு கைவிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

கல்வித்துறை அமைச்சர் இரு மொழிக் கொள்கை தொடர்பாக பொதுவான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன், மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். புதுச்சேரியில் பி.எம். ஸ்ரீ திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதை உதாரணமாகக் காட்டினார். மேலும் முதலமைச்சரின் அறையில் ‘ரீல்ஸ்’ எடுக்கப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்த தமிழிசை, “முதலமைச்சர் அறை மிகவும் மரியாதைக்குரிய இடம். அங்கு தேவையற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் முடிவுக்கு சரியான திட்டமிடல் இல்லை என்று விமர்சித்த அவர், “எந்தக் கடைகள், எப்போது மூடப்படும் என்பதை மக்களுக்கு தெளிவாக அறிவிக்காததால் இன்று பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன” என்றார். டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் 10 ரூபாய் வசூல் விவகாரத்தில் போராட்டம் நடத்துவதையும், பல இடங்களில் சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதையும் சுட்டிக்காட்டினார். முந்தைய அரசு தேர்தலுக்கு முன் அவசரமாக 1,500 மருத்துவர்களுக்கு நியமனம் செய்து, 300 பேருக்கு மட்டும் பணியாணை வழங்கியதாகவும், மீதமுள்ளோர் பணியாணை கோரியபோது போலீஸ் மூலம் அடக்குமுறை ஏவப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அம்மா உணவகங்களை சீரமைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், டாஸ்மாக் மற்றும் மருத்துவர் பிரச்னைகளில் முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார். சிங்கப்படை அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மாறாக, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவத்தைச் சுட்டிய தமிழிசை, சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்தார்.

சில அரசு டெண்டர்கள் அவசரமாகத் தொடங்கப்பட்டு உடனே ரத்து செய்யப்படுவதாக வரும் தகவல்களையும் அவர் குறிப்பிட்டார். “கடந்த ஆட்சியின் குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால் மக்கள் அதிருப்தி அதிகரிக்கும். தவறுகளை இரேஸ் செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். ஆனால் இன்னும் எந்த மாற்றமும் தெரியவில்லை. முதலமைச்சர் இந்த விவகாரங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்” என்று தமிழிசை வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version