கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சுமார் 3,085 ஏக்கர் நிலங்கள், ரூ. 25,000 கோடி மதிப்பீட்டில், முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு அவசர அவசரமாகப் பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளதாக அவர் பகீர் கிளப்பினார். “கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலங்களை அழிக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறதா? இந்த அவசரத்தின் பின்னணி என்ன?” என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தை பாஜக தீவிரமாகக் கண்காணிப்பதாகவும், தவறு நடந்திருப்பின் நிலத்தை மீட்கப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் எச்சரித்தார்.

 இந்து கோவில்களின் நிலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக இதை செய்து இருக்கின்றாரா? என கேள்வி எழுப்பிய அவர், இதற்கு உறுதுணையாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இருக்கின்றாரா? எதற்காக இந்த அவசரம் ? எனவும் கேள்வி எழுப்பினார்.

பாஜக சார்பில் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் , இதை முழுமையாக ஆய்வு செய்த பின் இந்து அறநிலையத்துறை இடங்களை மீட்க பா.ஜ.க நிச்சயமாக மிகப்பெரிய போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்தார். முதல்வர் திட்டமிட்டு தான் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். ஒரே நாளில் 3085 ஏக்கர் நிலத்தை கொடுப்பது எந்த அடிப்படையில்? இதுவும் ஒரு விதத்தில் லஞ்சம் தான் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கரூர் நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கிய விவகாரத்தையும் விமர்சித்தார். “இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பல ஆண்டுகளாகத் தேர்வு எழுதிவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் தகுதியுள்ளவர்கள் இருக்கும்போது, முன்னுரிமை அடிப்படையில் வழங்காமல், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்குவது ஒருவித லஞ்சம்தான்” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், முதல்வரின் உரையை அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்பு செய்தது மற்றும் விஜய் வருகையையொட்டிப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது போன்றவற்றைக் கடுமையாகச் சாடிய நயினார் நாகேந்திரன், இது மாணவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் செயல் என்று குறிப்பிட்டார். “எம்.ஜி.ஆர். காலத்தில் மக்கள் நலன் சார்ந்தே நடவடிக்கைகள் இருந்தன. ஆனால், தற்போது நடிகராக இருந்து முதல்வரான விஜய், சமூகத்திற்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்துவது வருத்தமளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றன. 2029 தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் பாஜகவை எதிர்க்கத் தயாராகின்றன. இதன் மூலம் பாஜகவை அனைவரும் கண்டு அஞ்சுவது உறுதியாகிறது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version