திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் சிவபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தற்போது திருப்பூர் கோட்டத்தின் கீழ் அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் ஆகிய 5 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், திருப்பூர் மாநகராட்சியும் இந்த கோட்டத்தில் அடங்குவதால், மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை விரைவாக நிறைவேற்ற நிர்வாக ரீதியாக மாற்றம் அவசியம் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில், அதிக மக்கள் தொகை கொண்ட திருப்பூர் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து, அதன் அலுவலகங்களை திருப்பூர் நகரின் மையப்பகுதியில் அமைத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை எளிதில் அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு பெற முடியும் என்றார். இதற்கான கோரிக்கை மனுக்கள் ஏற்கனவே பலமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த சார் ஆட்சியர் சிவபிரகாஷ், திருப்பூர் கோட்டத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படி பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய பகுதிகளை இணைத்து ஒரு கோட்டமாகவும், அவிநாசி, ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு பகுதிகளை இணைத்து மற்றொரு கோட்டமாகவும் பிரிக்க முதற்கட்ட நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இதற்கான பணிகள் அரசு தரப்பிலும் நடைபெற்று வருவதாக சார் ஆட்சியர் தெரிவித்தார். கோட்டம் பிரிப்பு நடவடிக்கை குறித்து அதிகாரியின் உறுதியான தகவலை கேட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, சார் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.
