சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்குகிறார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் 3 நாட்கள் மட்டும் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று காவிரி பிரச்சினையில் முக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் தனிதீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திய கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. முதல் நாள் அமர்வின்போது திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு நாட்கள் விடுமுறைக்குப் பின் நேற்று மீண்டும் சட்டசபை கூட்டம் தொடங்கியது. அப்போது, புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முடிவுக்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரின.
அதேவேளையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்க தி.மு.க. கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அரசு சார்பில் 110 விதியின் கீழ் விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. தேசிய கீதம் இரண்டு முறை ஒலிக்கப்பட்டது ஏன் எனக் கேட்டு, மத்திய அரசுடன் இணக்கம் காட்ட முயற்சிப்பதாக விமர்சித்தன.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவது, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டின. புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முடிவால் புதிய சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரித்தன. த.வெ.க. நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கை என்ன எனவும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் த.வெ.க. பக்கம் சாய்வது ஏன் எனவும் கேள்விகளை அடுக்கினர்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யை நோக்கி நேரடியாகக் கேள்விகளை எழுப்பினர். வெள்ளிக்கிழமை நேரலை ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முழுமையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று விரிவான பதிலுரை அளிக்கவுள்ளார். அவரது உரை சட்டசபை விவாதத்துக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
