பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழகத்தில் மேலும் இரண்டு டி.என்.ஏ. (மரபணு) பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கை விரைந்து விசாரிக்கவும், போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற பதிவுத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக ஆறு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவற்றின் விசாரணையை விரைவுபடுத்துவதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சென்னை உள்ளிட்ட மூன்று இடங்களில் தற்போது டி.என்.ஏ. பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகவும், வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு புதிய மரபணு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
விசாரணையின்போது நீதிபதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க உயர்நீதிமன்றத்தில் சிறப்பு குழு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டனர். மேலும், சிறப்பு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அனைத்து வழக்குகளையும் தினசரி அடிப்படையில் விசாரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், பெரும்பாலான வழக்குகளில் வழக்கறிஞர்களே விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
