கரூர் மாவட்டம், குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்த 25 வயதுடைய திருமணமான பெண் ஒருவர், குளித்தலை தனியார் மெடிக்கலில் பணி புரிந்து வருகிறார். இப்பெண்ணுக்கு தமிழக வெற்றிக் கழக கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர், வரகூர் தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர், அப்பெண் பணிபுரியும் மெடிக்கல் கடைக்கு எதிரே நின்றுக் கொண்டு அவருக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அத்தோடு, அப்பெண் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது, பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக பேசுவதும், சைகை காட்டுவதுமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பெண்ணின் கணவருக்கு தெரியவர, கடந்த 2 மாதங்களாக அப்பெண்ணை அவரது கணவரே வேலைக்கு அழைத்து செல்வதும், கூட்டி வருவதுமாக இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அவரது கணவரால் வர முடியாமல் போக, தனது தங்கையோடு வீடு திரும்பிய அப்பெண்ணை வழிமறித்த ரமேஷ், தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு கூடிய அக்கம் பக்கத்தினர் ரமேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் ரமேஷை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் ரமேஷ், தவெகவில் ஒன்றிய செயலாளராக இருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் அடித்ததில் காயமடைந்த அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
