கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தவரின் மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்தாமரைக்குளம் அருகே உள்ள ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளியான பாஜக நிர்வாகி சபரிவர்மன் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு ஆனந்தவல்லி (24) என்ற மனைவியும், வினு வர்மன் (4) என்ற மகனும் உள்ளனர். கடந்த 9 ம்தேதி பிற்பகலில் தென்தாமரைக்குளம் எஸ்ஐ பிரைட் பிளஸ்சிங் தலைமையில் போலீசார் சபரிவர்மன் கடையில் சோதனை நடத்தியபோது குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சபரிவர்மனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
கடந்த 10ம்தேதி, சிறையில் இருந்த சபரிவர்மனை, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர்.
இந்தநிலையில் ஜூன் 13ஆம் தேதி அதிகாலையில், சிறையில் சபரிவர்மன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை சிறை காவலர்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு பரிசோதனையில் சபரிவர்மன் இறந்தது தெரிய வந்தது. உடனடியாக உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் போலீசாரும் குவிக்கப்பட்டனர். அப்போது சபரிவர்மன் சாவில் மர்மம் உள்ளதாகக் குற்றம்சாட்டிய உறவினர்கள், அவரது உடலை அவசரமாக பிணவறைக்குள் கொண்டு சென்றது ஏன்? உடலை ஏன் காட்டவில்லை எனக் கூறி, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி தவெக ஆட்சியிலும் லாக் அப் டெத் நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சபரிவர்மன் மரணத்தின் உண்மைக் காரணம் என்னவென்பதை எவ்வித சமரசமுமின்றி கண்டறிய வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
போலீசார் தரப்பில் திடீர் உடல்நலக் குறையால் சபரிவர்மன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது சபரிவர்மன் தென்தாமரைக் குளம் காவல்நிலையத்தில் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததாகக் கூறி அவர் அமர்ந்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உடல்நலனுடன் இருந்த நபர் எப்படி சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவின்றி உயிரிழந்தார் என அரசை நோக்கி கேள்வி எழுந்துள்ளது.
