தமிழகத்தில் ஒருவர் உட்பட 25 ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விரைவில் 25 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜூன் 21 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் பல எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால், அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்கெனவே காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா இடத்திற்கும் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மயிலம் சட்டமன்றத் தொகுதியில் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை சி.வி. சண்முகம் ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2028 வரை இருந்ததால், இப்போது இடைத்தேர்தல் அவசியமாகியுள்ளது.

அண்ணாமலைக்கு ஆந்திரா வழியாக ராஜ்யசபா?

இதற்கிடையே, தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலைக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் பாஜக ஆகியவை இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.), அங்கு காலியாகும் நான்கு ராஜ்யசபா இடங்களை கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் அண்ணாமலையை பாஜக மேலிடம் நிறுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தீவிர அரசியல் பணியாற்றி வரும் அண்ணாமலையை தேசிய அரசியல் அரங்குக்கு கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. மேலும், அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கும் திட்டமும் பாஜகவில் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இது தமிழ்நாடு பாஜகவுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தவெக வேட்பாளர் உறுதி:

தமிழ்நாட்டில் காலியாகியுள்ள ராஜ்யசபா இடத்திற்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ரவி, அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜெகதீஷ் உள்ளிட்ட பலரின் பெயர்கள் தவெகவில் பரிசீலனையில் உள்ளன. இறுதி வேட்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ராஜ்யசபா தேர்தல்கள், வரும் நாட்களில் பல மாநிலங்களில் அரசியல் சமன்பாடுகளை மாற்றியமைக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவின் வலுவை அதிகரிக்கும் வகையில் அண்ணாமலையை முன்னிறுத்தும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிட்டால், அனைத்து கட்சிகளும் தீவிர தயாரிப்பில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version