தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கு வகிப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசின் பெயரை அமைச்சரவைக்கு திருமாவளவன் பரிந்துரைத்துள்ளார்.
திமுக கூட்டணியில் எங்களின் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
விசிக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று வெளிப்படையான அழைப்பை ஆதவ் அர்ஜுனா முன் வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற வெளிப்படையான அழைப்பை அடுத்து, எனது கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து ஆய்வு செய்தோம்.
பெரும்பான்மையினர் அடிப்படையில் அமைச்சரவையில் கலந்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளோம் என்றார்.
அமைச்சரவையில் வன்னி அரசின் பெயரை பரிந்துரைக்க விசிக முடிவெடுத்துள்ளதாகவும் அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது தங்கள் கட்சியின் பெரும்பாலானரின் கருத்தாக உள்ளதாகவும் கூறினார்.
8 ஆம் தேதி இரவு 6 மணிக்கு நாங்கள் நடத்திய இணைய வழி உயர்மட்ட கூட்டத்திலும், 32 பேர் பங்கேற்றத்தில் ஒரு சிலரை தவிர அத்தனை பேரும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை முன் வைத்ததாகவும்,
அதே நேரத்தில் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுகிறோம் என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
அதனையொட்டி தான் 9-ஆம் தேதி முற்பகல் பொதுச் செயலாளர்கள் உடன் நான் உயர்நிலைக் குழுவின் முடிவை முன்வைத்து கலந்தாய்வு செய்தேன் எனவும்,
நிறைவாக நாங்கள் வெளியில் இருந்து ஆதரவளிப்பது என்ற முடிவை எடுத்தோம். நிபந்தனையற்ற ஆதரவை நல்குவது என முடிவெடுத்தோம். அதன் அடிப்படையில் தான் ஆதரவு கடிதத்தை வழங்கினோம் எனத் தெரிவித்தார்.
ஆனாலும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள் என்றாலும் கூட, நாங்கள் அதை எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் இருந்து வெளிப்படையான அழைப்பு வந்தது.
அந்த அழைப்பையொட்டி கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவதை பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும், கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வரும் முதல் இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என்றார்.
1991 ல் மூப்பனாரோடு நாங்கள் முன்வைத்த முழக்கம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு,
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி முறை என்பது அறிமுகம் ஆகியிருக்கிறது.
எனவே தமிழக வெற்றி கழகம் விடுத்த அழைப்பையும் கணத்தில் கொண்டு, கட்சியின் நீண்ட கால கனவையும் கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை பெரும்பான்மையான பொறுப்பாளர்கள் வலியுறுத்தியதன் பேரில், தவெக அமைச்சரவையில் சேரும் இந்த முடிவை நாங்கள் எடுத்து இருக்கின்றோம் எனக் கூறினார்.
திமுக கூட்டணியில் எங்களின் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
