தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. 1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது முதல், கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் கோட்டையாகவே இருந்து வந்த தமிழகத்தில், தனது முதல் தேர்தலிலேயே அதனைத் தகர்த்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
ரஜினியின் தயக்கம்: 25 ஆண்டுகால எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
1996-ல் “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது” என ரஜினி கொடுத்த அந்த ஒற்றை ‘வாய்ஸ்’, தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது. அன்றிலிருந்து ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்களும் மக்களும் 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்தனர். “இதோ வருகிறேன், அதோ வருகிறேன்” எனப் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த ரஜினி, 2021 தேர்தலுக்கு முன்பாகத் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி பின்வாங்கினார்.
அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, உடல்நிலை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், தனது ரசிகர் மன்ற பலம் வாக்குகளாக மாறுமா? அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியுமா? மற்றும் தேர்தல் களத்தில் கோடிக்கணக்கான பணத்தை இறைக்க வேண்டுமே போன்ற அச்சங்களே ரஜினியை ஜகா வாங்க வைத்தன. 25 ஆண்டுகால எதிர்பார்ப்பு இறுதியில் ஒரு வெற்றுப் பெருமூச்சாகவே முடிந்தது.
கமல், விஜயகாந்தின் சறுக்கல்கள்
ரஜினியைப் போலத் தயங்காமல் களத்தில் குதித்தவர் கமல்ஹாசன். 2018-ல் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கி 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவரோ அவரது கட்சியினரோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தீவிரமான அரசியல் பேசினாலும், அது ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு மக்களுக்கான அரசியலாகவே பார்க்கப்பட்டதால் கமலால் மக்கள் மனதை வெல்ல முடியவில்லை.
அதேபோல், ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த், தேமுதிகவைத் தொடங்கி ஆரம்பத்தில் ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தார். ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பைப் பெற்றாலும், இறுதியில் திராவிடக் கட்சிகளுடனான கூட்டணி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவரால் ஆட்சிக் கட்டிலைப் பிடிக்க முடியவில்லை.
எம்ஜிஆர் சாதனையை எட்டிப்பிடித்த விஜய்
இந்த ஜாம்பவான்கள் சறுக்கிய இடத்தில் தான், விஜய் தனது நுணுக்கமான அரசியலால் வெற்றி கண்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழக வெற்றிக்கழகம்’ கட்சியைத் தொடங்கிய விஜய், ரஜினியைப் போலத் தயங்கவோ, கமலைப் போலத் தத்துவங்கள் பேசவோ இல்லை. மாறாக, மிகத் தெளிவான திட்டமிடலுடன் களம் இறங்கினார்.
2026 தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், விஜய் வெறும் வாக்குகளைப் பிரிப்பார் என்றும் கணித்திருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் தமிழகத்தை அதிர வைத்துள்ளன. முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மாற்றத்தை விரும்பி ஒட்டுமொத்தமாக விஜய்யின் பக்கம் சாய்ந்துள்ளனர்.
உடைந்த 60 ஆண்டுக்கால திராவிடச் சங்கிலி ஆட்சி
60 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக என மாறி மாறி அவ்விரு கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு விஜய் ஒரு புதிய நம்பிக்கையாகத் தெரிந்தார். 1977-ல் எம்.ஜி.ஆர் எப்படி திமுகவில் இருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி தொடங்கி முதல்வரானாரோ, அதே சாதனையை அரை நூற்றாண்டுக்குப் பிறகு விஜய் நிகழ்த்தியுள்ளார்.
விஜய்யின் இந்த வெற்றி, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. 1967-க்குப் பிறகு முதன்முறையாகத் திராவிடக் கட்சிகள் இல்லாத ஒரு ஆட்சி அமையப் போவது உறுதியாகியுள்ளது. விமர்சனங்களுக்கு அஞ்சாமல், பணபலத்திற்குப் பணியாமல், மக்கள் பலத்தை மட்டுமே நம்பி விஜய் எடுத்த இந்த ரிஸ்க், இன்று அவரை தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர வைத்துள்ளது.
ரஜினிக்கு இருந்த தயக்கம் விஜய்க்கு இல்லை; கமலுக்கு இருந்த ‘கிளாஸ்’ அரசியலைத் தாண்டி விஜய் ‘மாஸ்’ அரசியலைச் சரியாகக் கையாண்டார்; விஜயகாந்தால் தொட முடியாத இலக்கை விஜய் தனது தெளிவான பார்வையால் தொட்டுள்ளார். தமிழக அரசியலில் இது விஜய்யின் சகாப்தமாகவே பார்க்கப்படுகிறது.
