தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று மிரட்டி வருகிறது. ‘விசில்’ சின்னத்தில் களம் கண்ட தவெக, தனது முதல் தேர்தலிலேயே ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி குறித்து வில்லிவாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாபெரும் அரசியல் புரட்சி வெடித்துள்ளதாகக் குறிப்பிட்டார். “மன்னராட்சி முறைக்கு இன்றுடன் முடிவு எழுதப்பட்டுவிட்டது. குடும்ப அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஒன்றிணைந்து திமுகவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்,” என அவர் மிகத் தீவிரமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.
மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா, திட்டமிட்டே பல அவதூறுகள் பரப்பப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார். அரசு இயந்திரமே தவெக-வுக்கு எதிராக நின்ற போதிலும், அத்தனையையும் மீறி மக்கள் சக்தியால் விஜய் இந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். தவெக-வின் இந்த எழுச்சி, தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
