சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் கல்லூரிக்குப் பின்னால் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சிய நெசவுத் தொழிலாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொங்கணாபுரம் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரிக்குப் பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகச் சேலம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு முறைகேடாகக் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது உறுதியானது. அதையடுத்து, காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 லிட்டா் சாராய ஊறலை போலீசார் உடனடியாகக் கீழே ஊற்றி அழித்தனர்.
இந்தச் செயலில் ஈடுபட்டது எடப்பாடி அருகிலுள்ள வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த மாது என்ற பெரியமாது (51) என்பது விசாரணையில் தெரியவந்தது. நெசவுத் தொழிலாளியான அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கல்லூரிப் பகுதிக்கு அருகில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
