தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு ஆளும் திமுகவுக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. யாருமே எதிர்பாராத வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி பெருவாரியான வெற்றியினைப் பெற்றுள்ளது. இதனால் ஆட்சி அமைப்பதற்கான முஸ்தீபுகளில் தவெக தீவிரம் காட்டி வருகிறது.
திமுக கூட்டணிக்கு 73 இடங்களையும் அதிமுக கூட்டணிக்கு 53 இடங்களையும் வழங்கியுள்ள மக்கள், திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள்.
சட்டமன்ற எதிர்க்கட்சியாக மாறியுள்ள திமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர், யார் துணைத் தலைவர், யார் கொறடா என்பது குறித்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால் அவர் தற்போது எம்.எல்.ஏவாகவும் இல்லை. இதனால் அவர் சட்டமன்றம் செல்லமுடியாத நிலை. துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும்… திமுகவில் மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, ஏ.வ வேலு, ஐ பெரியசாமி ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ள நிலையில் இதில் கே.என் நேரு, ஏ.வ வேலு, ஆகியோரில் ஒருவருக்கும் எதிர்கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம், எனவும், ஐ. பெரியசாமிக்கு கொறடா பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் அலையடிக்கிறது.
மேலும் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
