மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர் எட்டப்பன் என்னும் தவறான வரலாற்றுப் பிழையை சரி செய்ய எட்டயபுரம் மன்னர் வாரிசு ஒருவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வீரபாண்டிய கட்ட பொம்மன் என்னும் பெயரைச் சொன்னாலே, நம்மை அறியாமல் எட்டப்பன் என்னும் பெயர் நமது நினைவுக்கு வரும். ஆனால், வரலாற்றில் பிழையாகவே எட்டப்பன் நமக்கு காட்டப்பட்டு வருகிறார் என்கிறார்கள் ஆய்வறிஞர்கள்.
விஜயநகரப் பேரரசின் கீழ் ஆந்திராவின் சந்திரகிரியை ஆட்சி செய்து வந்தவர்கள்தான் எட்டப்ப மன்னர்கள்.இம்மன்னர்களில் ஒருவரான நல்லமநாயக்கர், சாம்பு மகாராஜாவை தரிசிக்க சென்றபோது, அங்கு காவலுக்கு இருந்த சோமனை வீழ்த்தியதாகவும், அதன் பின்னர் ஆதரவற்ற சோமனின் தம்பிகள் எட்டுபேரை தத்தெடுத்து அவர்களுக்கு அப்பாவாக இருந்ததால், எட்டப்ப நாயக்கர் பெயர் வந்ததாகவும், அவரைத் தொடர்ந்து இந்த பரம்பரையில் வந்த மன்னர்கள் அனைவரும் எட்டப்பன் என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்ததாகவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதேபோல், விஜயநகர பேரரசு வீழ்ச்சி அடைந்த பின்னர், ஆந்திராவில் இருந்து தென் தமிழ்நாட்டிற்கு எட்டப்ப நாயக்கர் குடிபெயர்ந்ததாகவும், அவர் பெயரால் அமைந்த ஊரே எட்டயபுரம் எனவும் ஆய்வாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.
எட்டயபுரம் பாளையத்தாருக்கு, அருகிலேயே இருந்த பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தார் எதிரிகளாகவே இருந்து வந்ததாகவும், இதனால் வீரபாண்டிய கட்டபொம்மனும், எட்டப்பனும் எதிரிகளாகவே இருந்து வந்ததாகவும் ராபர்ட் கால்டு வெல் எழுதிய நூல் தெரிவிக்கிறது.
அதே நேரம் இந்த முன்பகைக்கு காரணம் ஆங்கிலேயர்கள் தான் எனவும், ஆங்கிலேயருக்கு வரி கட்டுவதை வீரபாண்டிய கட்டபொம்மன் எதிர்த்த நிலையில், கட்டபொம்மனோ முறையாகக் கட்டி வந்தார் என, தமிழ்ப் பேராசிரியர் வே.மாணிக்கம் எழுதிய வீரபாண்டியக் கட்டம்பொம்மு விவாத மேடை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டப்ப மன்னர் எதிரியாக இருந்தார், ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் துரோகம் செய்தார் என்பதற்கோ அல்லது ஏதேனும் சதி செய்து கட்டபொம்மனை காட்டிக் கொடுத்ததற்கோ எந்த தெளிவான ஆதாரமும் கிடைக்கவில்லை.

இதேபோல், கோல்வார்பட்டி தாக்குதலுக்கு பிறகு கட்டபொம்மன் உட்பட சிலர் மட்டும் தப்பித்து புதுக்கோட்டை தொண்டைமான் ராஜாவிடம் உதவி கேட்டு சென்றதாகவும், அப்போது தொண்டைமான் ராஜாவால் அவர்கள் சிறைப்படுத்தப்பட்டு மேஜர் பானர்மேனிடம் அனுப்பி வைக்கப்பட்டனர், எனவும் 1917 இல் வெளியிடப்பட்ட மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் கெசட்டில் (திருநெல்வேலி) பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பன் என எவ்வாறு பதிவு செய்தார்கள் என புரியவில்லை. அது ஒரு வரலாற்றுப் பிழை.
அந்தப் பிழையை நீக்க வேண்டும் என எட்டயபுரம் மன்னரின் வாரிசும் எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42-வது மகாராஜாவுமான சந்திர சைதன்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் தூறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ சந்தித்து, எட்டயபுரம்_சமஸ்தானம் தொடர்பாக, 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவறான தகவலை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போதைய தவெக ஆட்சியிலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை நேரில் சென்று சந்திர சைதன்யா சந்தித்தார்.

அப்போது, “மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர் எட்டப்பன்” என்ற தவறான வரலாற்றுத் தகவலை தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கிட வேண்டும் கோரிக்கை மனு அளித்துள்லார்.
இது தொடர்பாக எட்டயபுரத்தில் நடைபெற்ற பொதுமக்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் குறித்த விவரங்களையும் அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை பொறுமையாக கேட்ட அமைச்சர் ராஜ்மோகன், பாடநூல் ஆய்வு கழகத்திடம் ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
எட்டப்பன் மீதான வரலாற்றுப் பிழை இந்த ஆட்சியிலாவது துடைக்கப்படுமா?
மு.செய்யது
