தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய வியூகத்தைக் கையாளத் தயாராகி வருகின்றன. வழக்கமாகப் பெரிய திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுவரும் இடதுசாரிகள், இந்த முறை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.

கேரளாவில் செயல்படும் எல்.டி.எஃப் (LDF) கூட்டணியைப் போல, தமிழ்நாட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)), மற்றும் சிபிஐ (எம்.எல்) விடுதலை ஆகிய மூன்று முக்கிய இடதுசாரி அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகப் பிற கட்சிகளின் கூட்டணியில் இருந்ததால், தங்களின் தனித்துவத்தையும் மக்கள் செல்வாக்கையும் வெளிப்படுத்த இடதுசாரிகள் தவறிவிட்டதாகக் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களின் உண்மையான அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்று தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில், இந்த இடதுசாரி கட்சிகளின் மாநில அளவிலான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த ஆலோசனை கூட்டம், தமிழக அரசியலில் இடதுசாரிகளின் அடுத்தகட்ட நகர்வையும், தேர்தல் களத்தில் அவர்களின் தனித்துவமான செயல்பாட்டையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version