இடதுசாரி கட்சிகளின் 4 ஆவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று தி.நகரில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளுடைய மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் இடதுசாரி மாற்றுக் கொள்கைகளை முன்வைத்த மாநில அளவிலான ஒரு பேரணியை அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி திருச்சியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களை திரட்ட உள்ளனர்.

மேலும் இந்தப் பேரணியில் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியிலே கொண்டு செல்லக்கூடிய வகையில் ஒரு விரிவான கோரிக்கை பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் இந்த கூட்டத்திலே முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக இடதுசாரி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இன்னொரு விடுதலைப் போர் தேவை எனக் கூறினார்.  முதல் விடுதலைப் போர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவித்தது. இரண்டாவது விடுதலைப் போர் முதலாளித்துவத்திடமிருந்து இந்த தேசத்தை, சோசலிசத்திற்கு கொண்டு வரக்கூடிய போராட்டமாக இருக்கக்கூடிய காரணிகள், அறிகுறிகள் தென்படுவதாகக் கூறினார்.

புதிய உலகம், புதிய திசையை நோக்கிப் பயணிப்பதற்கு இடதுசாரிகள் தயாராக இருக்கிறோம். இடதுசாரிகள் மட்டுமே அல்ல, நாட்டின் மீது அக்கறை செலுத்துகிற ஏராளமான ஜனநாயக சக்திகள் இருக்கிறார்கள். அவர்களை இடதுபக்கத்திற்குத் திருப்புகிற மகத்தான முயற்சியில் இடதுசாரிகள் ஈடுபடுவோம் எனவும் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவர் நேற்றைய தினம் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் அந்த மாதிரி பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

பொதுவெளியில் எதிர்கட்சித் தலைவர்கள் பேசுகின்றபோது நாகரிகத்தோடு பேச வேண்டும். அரசியல் நாகரிகத்தைப் பின்பற்ற வேண்டும். இத்தகைய முறையில் யார் பேசியிருந்தாலும் பேசியது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் அவருக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர்கள் பேசியிருக்க வேண்டும் என்றார்.

பெண்களை இழுத்து இழிவாகப் பேசுவது என்பது நீண்ட காலமாகப் பலர் பேசி வருகிறார்கள். இதற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதலில் அந்தக், கட்சியை சார்ந்தவர்களை ஒழுங்குபடுத்துவது முதன்மையானது எனத் தெரிவித்தார்.

இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாருமே இப்படி பேசமாட்டார்கள். அப்படி பேசினால் அவர்களை நாங்கள் கட்சியிலேயே வைத்திருக்கமாட்டோம். அந்த மாதிரியான உறுதியான கொள்கைகள் என்பது மற்றக் கட்சிகளுக்கு இல்லை என்றார்.

தமிழக வெற்றி கழகத்துக்குள்ளும் இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ளதே என்னும் கேள்விக்கு,

எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களைப் பாலியல் ரீதியாகப் பேசுவது, பாலியல் ரீதியில வன்கொடுமைகள் புரிவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தமிழக வெற்றிக் கழகம்  தேர்தல் வாக்குறுதிகளின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறியது போல பட்ஜெட்டில் அதனை கொண்டு வர வேண்டும் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version