உலகக்கோப்பை கால்பந்து போட்டியால், திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை அதிகரித்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் விளையாட்டு நிகழ்வு. இந்த முறை போட்டிகள் தொடங்கியதும் உலகம் முழுவதும் கால்பந்து பைத்தியம் பரவியுள்ளது. இந்திய ரசிகர்களும் இந்த உற்சாக அலையில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் போன்ற உலகப் புகழ்பெற்ற வீரர்களின் படங்கள், அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும் லோகோக்கள் பொறித்த டீ-சர்ட்டுகளை அணிந்து ரசிகர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரமான திருப்பூரில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே இந்த உலகக் கோப்பைக்கான சிறப்பு டீ-சர்ட்டுகளைத் தயாரிப்பதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தன. போட்டிகள் தொடங்கியதும் உள்ளூர் மற்றும் வெளி மாநில சந்தைகளில் இருந்து ஆர்டர்கள் பெருக்கெடுத்துள்ளன. இந்தியாவில் கால்பந்துக்கு மிக அதிக ரசிகர்களைக் கொண்ட மாநிலமாகக் கருதப்படும் கேரளாவில் இந்த உற்சாகம் எல்லை மீறியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் வீரர்களின் பிரம்மாண்ட கட்-அவுட்கள், கொடிகள் மற்றும் ரசிகர் கூட்டங்கள் களைகட்டியுள்ளன.

கேரளாவின் பாலக்காடு, கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இருந்து வந்த மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் திருப்பூரின் பிரபலமான காதர்பேட்டை ஆடைச் சந்தைகளில் முகாமிட்டுள்ளனர். லட்சக்கணக்கான டீ-சர்ட்டுகளை அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

ஆடை விற்பனையாளர்கள் ஒருவர் கூறுகையில், “உலகக் கோப்பை காலத்தில் விளையாட்டு ஆடைகளுக்கான தேவை வழக்கமான காலத்தை விட பல மடங்கு அதிகரிக்கும். இந்த ஆண்டும் அதே போக்கு தொடர்கிறது. கேரளா வியாபாரிகள் அதிக அளவில் வருகை தந்து, விதவிதமான ரகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்கின்றனர். ரசிகர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.500 வரை விலையில், பல்வேறு வண்ணங்களில், உயர்தர துணிகளில் டீ-சர்ட்டுகளை வழங்கியுள்ளோம்” என்றார்.

கேரளா முதலிடத்தில் இருந்தாலும், மேற்கு வங்கம் (கொல்கத்தா), கோவா, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கணிசமான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் டீ-சர்ட்டுகளுக்கு மிக அதிக வரவேற்பு உள்ளது. ஐபிஎல் போட்டிகளை விட இந்த உலகக் கோப்பைக்கான ஆர்டர்கள் அதிகமாகக் கிடைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த உலகக் கோப்பை ஜூரம் ரசிகர்களை மட்டுமல்லாமல், திருப்பூரின் பின்னலாடைத் தொழிலையும் புத்துயிர் பெறச் செய்துள்ளது. தொழில் நகரத்தின் பொருளாதாரத்துக்கு இது முக்கிய ஊக்கமாக அமைந்துள்ளது. ரசிகர்களின் உற்சாகம் தொடரும் வரை இந்த வர்த்தக வேகமும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version