யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் பஞ்சாபைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு பிருந்தாவனத்தில் உள்ள யமுனை ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் யமுனை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 16 முதல் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து (PMNRF) தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது, கருணை தொகையை அறிவிக்கும்போது, உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு PMNRF-லிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000-மும் வழங்கப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version