ராமர் கோயில் கட்டுமானத்தில் மோசடி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அவனி பன்சால், இதுகுறித்து உயர்மட்ட நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் மீது எஃப்.ஐ.ஆர்  பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவனி பன்சால், பாஜகவினர் ராமரின் பெயரால் அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். ராமர் ஒன்றும் பாஜகவிற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் ஒட்டுமொத்த இந்துக்களின் கடவுள். ஒரு நல்ல தலைவர் என்றால் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர். ஆனால், ராமர் கோயில் கட்டுமான மோசடி குறித்து பாஜக வாய் திறப்பதே இல்லை. மதம் என்பது தனிநபரின் விஷயம். ஆனால், பாஜக மதத்தின் பெயரால் கடந்த 40 ஆண்டுகளாய் ரத யாத்திரை நடத்தி மக்களை ஏமாற்றி வருவதாக அவனி பன்சால் குறிப்பிட்டார்.

“ராமர் கோயில் அறக்கட்டளை என்பது தனியாரின் கீழ் வரவில்லை என்றால், ஏன் அதன் மூலம் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ (RTI) படி தகவல் பெற முடிவதில்லை?”

“அது தனியார் அறக்கட்டளை என்றால், மத்திய அரசு ஏன் அதன் பொறுப்பாளர்களை நியமிக்கிறது?”

“பொதுமக்கள் பல கோடி ரூபாய் தங்களது உழைப்பின் மூலம் நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். இந்த மக்கள் பணம் தனியார் கைக்குச் செல்ல வேண்டுமா?” என ராமர் கோயில் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்துக் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியனார்.

சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம்; ஆனால் அனைவரையும் பல நாட்கள் ஏமாற்ற முடியாது என்றும் அனைத்தையும் ராமர் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவனி பன்சால் தெரிவித்தார். மக்களை ஏமாற்றினால் அவர்கள் அமைதியாக இருக்கலாம், ஆனால் கடவுளை ஏமாற்றினால் அவர் வேடிக்கை பார்க்க மாட்டார். அதற்கான பதிலை அவர் எதிர்காலத்தில் கொடுப்பார் என்பது தெரியவரும்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version