நாடாளுமன்ற அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த (AAP) 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைவதற்கு மாநிலங்களவை தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலங்களவை ஆவணங்களில் இந்த 7 உறுப்பினர்களும் இப்போது பாஜக உறுப்பினர்களாகவே பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த இணைப்பின் மூலம், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.
7 எம்.பி.க்களை இழந்த ஆம் ஆத்மி கட்சியின் பலம் 10ல் இருந்து 3ஆக குறைந்தது. 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி கட்சி நேற்று துணைக் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்கள் பாஜகவுக்கு இப்போதைக்கு இல்லை. அதேசமயம் என்.டி.ஏ. கூட்டணிக்கு 140 எம்.பிகளுக்கு மேலான ஆதரவு உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா, “கட்சியின் தவறான செயல்களில் ஒரு பகுதியாக இருக்க விரும்பாததால் விலகியதாக” தெரிவித்தார். அரசியலில் இருந்து விலகுவது அல்லது நேர்மறையான அரசியலைத் தொடர்வது என்ற இரண்டு விருப்பங்களில், அனுபவத்தைப் பயன்படுத்த பாஜகவுடன் இணைய முடிவு செய்ததாக அவர் விளக்கினார்.
மேலும், தனது 15 ஆண்டுகால இளைமை பருவத்தை ஆம் ஆத்மிக்கு அர்ப்பணித்ததாக ராகவ் சத்தா தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்த பின் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு வீடியோ ஒன்றில் பதிலளித்துள்ளார். அதில், ஆம் ஆத்மி நச்சுத்தன்மை கொண்ட கட்சியாக மாறியுள்ளது. தீர்க்கமான யோசனைக்கு பின்னரே பாஜகவில் இணைந்தேன். அதற்கு எந்த அழுத்தமோ அச்சமோ காரணமில்லை. ஆம் ஆத்மி அளித்த ஏமாற்றமே காரணம் எனவும் விளக்கியுள்ளார்.
