கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை கடலில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், செருதூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் கத்தி, சுளிக்கி, தடி போன்ற ஆயுதங்களுடன் படகில் ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள் இந்திய மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் அவர்களது ஜிபிஎஸ் கருவி செல்ஃபோன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு அவர்களை தடியால் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாக்குதலை தடுத்த செருதூரை சேர்ந்த பழனிச்சாமி என்ற மீனவருக்கு கை உடைந்ததுடன், மற்ற மீனவர்கள் சக்திமயில், அபிமன், பாலசுப்ரமணியன், அபி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. படகில் இருந்த மீன்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறித்துக் கொண்டு படகை மோதித் தள்ளிவிட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் தப்ப முயன்றனர். மீன்பிடி தளவாட பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்ப முயன்ற போது, இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையன் அஜந்தன் என்பவன் இந்திய மீனவர்களிடம் சிக்கினான். இதனைக் கண்ட மற்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை எடுத்துக் கொண்டு பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து அவனை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
பிடிபட்ட இலங்கை கடற்கொள்ளையனுக்கு தர்மஅடி கொடுத்த மீனவர்கள், அவரை நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடி இறங்கு தளத்திற்கு அழைத்துச் சென்று கீழையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். செருதூர் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்கொள்ளையனிடம் கியூபிரிவு போலீசார் மற்றும் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
