பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வரும் 1-ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். சம்பள உயர்வு, 2020-ம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள், அரசு கழக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே அரசுடன் போக்குவரத்து கழக சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், போக்குவரத்து ஊழியர்கள் நூதன முறையில் போராட இருப்பதாகவும், வரும் 1-ம் தேதி முதல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பேருந்துகளில், பணிக்கும் ஆண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி நூதன முறையில் தங்களின் போராட்டத்தை நடத்த போக்குவரத்து கழக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 4,000 ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
