கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார்.

கடந்த செப். 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த நவ.25-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

இவர்களுடன், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர். டிச.4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்ற தவெக தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அவரிடம் மறுநாள் நடைபெற இருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னை திரும்பினார். இந்த நிலையில், சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று விஜய் ஆஜராகிறார். இதற்காக அவர் நேற்று மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version