உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞரை போலீசார் பிடித்து சென்றனர். விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்த கவாய் கருத்து கூறிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது காலணி வீசப்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது கலாணி வீசப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அவர்மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை வாத–பிரதிவாதங்கள், சட்டரீதியான வழிமுறைகள் மற்றும் அமைதியான முறைகளால் எடுத்துரைப்பது தான் நாகரிகமான நடைமுறை. நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை குறிவைத்து இப்படிப்பட்ட அநாகரீக செயல் நடப்பது என்பது, நீதித்துறையின் சுதந்திரத்தையும், மாண்பையும் கேள்விக்குறியாக்குகிறது; சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது; சமூக ஒற்றுமைக்கும் பொது அமைதிக்கும் விரோதமானதாகும்
வேறுபட்ட கருத்துகளுக்குப் பதில் வன்முறை வழியைத் தேர்ந்தெடுப்பது, முற்றிலும் ஒப்புக்கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதித்துறையின் கண்ணியத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்கும் அனைவரும் இப்படிப்பட்ட செயல்களை கடுமையாகக் கண்டிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.