சமூகவலைதளம் மூலம் சுமார் 30 பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து உல்லாசம் அணுபவித்த வடமாநில தொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் 15 வயது சிறுமியின் ஆபாச புகைப்படம் ஒன்று, அச்சிறுமியின் தாயார் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாயார் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் புகைப்படத்தை பதிவிட்ட மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரகாஷ் நாயக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், புதுச்சேரியில் இருந்து ஒஇசா தப்பிச் சென்று தப்பியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த தனிப்படை போலீசார் ஒடிசா சென்றனர். அங்கு பாலாசூர் பகுதியில் மறைந்திருந்த பிரகாஷ் நாயக்கை கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.

அதில் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. இது குறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரகாஷ் நாயக், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர், பெண்களின் புகைப்படங்களுக்கு லைக் போடுவது, அவர்களை வர்ணித்து கமெண்ட்ஸ் போடுவதுமாக இருந்துள்ளார்.

பிரகாஷ் நாயக்கின் இந்த மாய வலையில் சிக்கிய பல பெண்கள் அவருடன் தனிமையில் பேச ஆரம்பித்துள்ளனர். தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறியும், சில பல ஆசை வார்த்தைகளை கூறியும், அப்பெண்கள் இடத்திற்கே சென்று தனிமையில் அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் பிரகாஷ் நாயக். அதனை அப்பெண்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ பதிவு செய்ததுடன், சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகக் மிரட்டி, பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

பிரகாஷ் நாயக்கின் இந்த காதல் வலையில், சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பிரகாஷ் நாயக், புதுச்சேரியில் இருந்து தப்பி சென்று ஒடிசாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரகாஷ் நாயக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்பு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version