டெல்லியில் மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் நகைகளை பறித்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி., சுதா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார் எம்.பி., சுதா. கடந்த 4-ம் தேதி நாடாளுமன்ற குடியிருப்புப் அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சுதா அணிந்திருந்த தங்க செயினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மர்ம நபரிடம் இருந்து செயினை காக்க போராடியும் முடியவில்லை. அந்நபர் சுதாவை தாக்கி அவர் அணிந்திருந்த 4.5சவரன் செயினை பறித்துச் சென்றார். இதில் எம்.பி., சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து அவர் சாணக்யபுரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில், செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்.பி., சுதா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மின்னஞ்சல் வாயிலாக கடிதமும் அனுப்பினார். அந்தக் கடிதத்தில்,
“செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற போது என்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டது. உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்மநபரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடி சென்ற 4.5 சவரன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லி போலீசாரின் தங்களது எக்ஸ் வலைதளத்தில், “நாடாளுமன்ற உறுப்பினரின் சங்கிலியைப் பறித்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு செயின் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.