மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் எதார்த்தமான ஒரு செயல் இணையத்தில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஜார்கிராம் பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய பிரதமர், சாலையோரம் இருந்த ஒரு சிறிய ‘ஜால்முரி’ (காரப்பொரி) கடையைக் கண்டு திடீரெனத் தனது வாகனத்தை நிறுத்தினார். ஒரு நாட்டின் பிரதமர் எவ்வித பந்தாவும் இன்றி காரிலிருந்து இறங்கி வந்து, சாதாரணமாக நின்றபடி காரப்பொரியைச் சுவைத்த விதம் சமூக வலைதளவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விக்ரம் குமார் என்ற அந்தச் சிறு வியாபாரியிடம் கனிவுடன் உரையாடிய பிரதமர், ஜால்முரியின் ருசியைப் பாராட்டியதோடு அதற்கான தொகையையும் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இந்தச் சந்திப்பின் போது பிரதமர் அடித்த ஒரு நச் நகைச்சுவைதான் இப்போது சமூக வலைதளங்களில் ‘மீம்’ (Meme) மெட்டீரியலாக மாறியுள்ளது. ஜால்முரி தயார் செய்தபோது கடைக்காரர் “வெங்காயம் சேர்க்கட்டுமா?” என்று கேட்டதற்கு, “நான் வெங்காயம் சாப்பிடுவேன், ஆனால் யாருடைய மூளையையும் (Brain) சாப்பிடுவதில்லை” என்று பிரதமர் கிண்டலாகப் பதிலளித்தார். அரசியல் மேடைகளில் அனல் பறக்கப் பேசும் பிரதமர், ஒரு சாதாரண மனிதராக நகைச்சுவை உணர்வோடு வெளிப்பட்ட இந்த வீடியோ, பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இன்ஸ்டாகிராமில் மட்டும் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைத் தாண்டி உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது. ஏற்கனவே 10 கோடி பின்தொடர்பாளர்களைக் கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற மகுடத்தைச் சூடியுள்ள பிரதமருக்கு, இந்த வீடியோ கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.
பிரதமரின் இந்தத் திடீர் வருகையினால், அதுவரை சாதாரணமாக இருந்த விக்ரம் குமாரின் கடைக்கு இப்போது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. “இனி என் கடை ‘பிரதமர் ஜால்முரி கடை’ என்று அழைக்கப்படும்” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விக்ரம். பிரதமரின் இந்தச் செயலை ஒருபுறம் பாஜகவினர் “மக்களுடன் மக்களின் தலைவராக” கொண்டாடி வரும் நிலையில், மறுபுறம் இது தேர்தல் நேரத்துத் ‘டிராமா’ எனப் போட்டித் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ, மேற்கு வங்கத்தின் பாரம்பரியமான ஒரு தின்பண்டமான ஜால்முரி, இப்போது டிஜிட்டல் உலகின் பேசுபொருளாக மாறியிருப்பதைத் தவிர்க்க முடியாது.
