வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர். பாதுகாப்பு அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு இருவரையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தனது எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஆகியோர் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதை அறிந்து பெரும் நிம்மதி அடைகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் தொடர்ந்து ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் அந்தப் பதிவில் பகிர்ந்துள்ளார். மேலும், அமெரிக்காவைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற அச்சுறுத்தல்கள் நிகழுவது கவலையளிப்பதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை என்பது எந்தவொரு நாகரீக சமூகத்திற்கும், ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானது என்பதை பிரதமர் மோடி தனது செய்தியில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். “ஜனநாயகக் கட்டமைப்பில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை; இத்தகைய செயல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டியவை,” என்று அவர் சாடியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உலகத் தலைவர்களில் ஒருவராகப் பிரதமர் மோடி உடனடியாகத் தனது ஆதரவையும் கண்டனத்தையும் பதிவு செய்திருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version