மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், காதலித்த பெண்ணிற்காகத் தனது கணவரை மனைவி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாகப் பணம் பெற்றுக்கொண்டு “விற்பனை” செய்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 42 வயதுடைய பெண் அரசு அதிகாரி ஒருவருக்கும், அவருடன் பணிபுரிந்த  54 வயதுடைய நபருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அந்த நபர் ஏற்கனவே திருமணமாகி 23 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குடும்பத்திற்குள் வெடிக்கவே, பாதிக்கப்பட்ட மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, கணவரின் காதலி தனக்குச் சொத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும், காதலனுடன் வாழத் தான் எதையும் இழக்கத் தயார் என்றும் தெரிவித்தார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தனது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப நலனைக் கருத்தில் கொண்ட மனைவி, ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.

அதன்படி, கணவரின் காதலியிடமிருந்து 1.5 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டு, தனது கணவரை அவருடன் வாழ அனுமதிப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். 23 ஆண்டு காலத் திருமண உறவைப் பணத்திற்காக மனைவி விட்டுக்கொடுத்த இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி விவாகரத்து மற்றும் இழப்பீடு என்பதற்குப் பதிலாக, காதலியிடமே கணவரை விலைக்கு விற்ற இந்த வினோத சமரசம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version